தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்கள் என பட்டியலிட்டால், அதில் கண்டிப்பாக மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு என தனி இடம் என்றும் இருக்கும். தன்னுடைய கணீர் குரலில், கதாநாயகர்களின் பிரம்மாண்ட தொடக்க பாடல்கள் முதல் உணர்ச்சிகரமான உருக்கமான பாடல்கள் என மக்களை ஈர்த்தவர்.
ஒரு இசை குடும்பத்தில் பிறந்து, தனது வசீகரமான குரலால் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக வளர்ந்தவர், 8000 பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர் மலேசியா வாசுதேவன். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டு, இசையை சிறு வயது முதல் ஊட்டி வளர்க்கப்பட்டார் வாசுதேவன்.
தனது தந்தைக்கு இசை மீது இருந்த ஆர்வத்தால், வீட்டில் அனைவருடனும் பாடி மகிழ்ந்து, பின்னர் அதையே நாடக குழுவில் சேர்ந்து தனக்கான துறையாக மாற்ற முயற்சித்தார். பாடுவதை தாண்டி நடிப்பிலும் பேரார்வம் கொண்டவர், மலேசியாவில் இருந்து சென்னைக்கு நடிக்க தன்டுஹ் குழுவுடன் வந்தவர் பாடகராக உருவான கதை இயல்பானது என்றாலும், அனைவராலும் சாதிக்க முடியாத ஒன்று.
இளையராஜாவின் இசை குழுவில் சேர்ந்தவர், இசைஞானியின் இசையில் பாட தொடங்கிய பின் தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றார். முக்கியமாக நடிகர் ரஜினிகாந்தின் பாடல்களை பாடி, பெருமளவில் பிரபலமானவர், இருவரின் கூட்டணியில் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தனர்.
1980ல் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என பாடி ரஜினி ரசிகர்களை தன்னுடைய குரலுக்கு அடிமையாக்கினார். பின்னர் ‘பட்டுக்கோட்டை அம்மாளு’, ‘ஆசை நூறு வகை’, ‘என்னோட ராசி நல்ல ராசி’ என இருவரின் கூட்டணியில் திரையரங்கம் அதிர பாடல்கள் கொண்டாடப்பட்டது.
படிக்காதவன் படத்தில், ‘சொல்லி அடிப்பேனடி’ பாடலும் பில்லா படத்தில் ‘வெத்தலைய போட்டேன் டி’ ஆகிய பாடல்கள் இன்றும் பட்டிதொட்டி எங்கும் ஒலிப்பதற்கு மலேசியா வாசுதேவன் அவர்களின் காந்த குரல் தான் காரணம். துள்ளலான, கொண்டாடட்டமான பாடல்கள் மட்டுமல்லாமல் ‘ஒரு தங்க ரதத்தில்’, ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ என மெலோடியான பாடல்களையும் பாடியுள்ளார்.
‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்று அவரின் கணீர் குரலில் கேட்கும்போதே ஒரு உத்வேகம் பிறப்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று. ‘கல்யாணராமன்’ படத்தில் ‘காதல் வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன்’ பாடலை இன்றும் பாட்டு போட்டிகளில் ஒரு சவாலாக எடுத்து பாடி வருகிறார்கள்.
நடிகராக மலேசியா வாசுதேவன்
நடிப்பின் ம்மித்து ஆராவதுடன் இந்தியாவிற்கு வந்த இவர் பின்னணி பாடகராக நிற்க நேரமில்லாமல் இருந்தாலும், 1985ல் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். கேப்டன் விஜயகாந்துடன் ‘ஊமை விழிகள்’, ரஜினிகாந்த் உடன் ‘ஊர்காவலன்’, ஜல்லிக்கட்டு, அமைதி படை, திருடா திருடா, பத்ரி ஆகிய படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பாராட்டப்பட்டவர்.
கலைமாமணி பட்டம் பெட்ரா இவர், இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான மாநில விருதையும் பெற்றுள்ளார். இவரின் மகன் யுகேந்திரனும் தனது தந்தையை போலவே பின்னணி பாடகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவரின் மகள் பிரஷாந்தினி பின்னணி பாடகியாவார்.
2011ம் ஆண்டு பல ஆண்டுகளாக உடல் சோர்வின் காரணமாகவும், சர்க்கரை நோயாலும் அவதிப்பட்டவர் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரின் பாடல்கள் வழியாக தினசரி பல கோடி மக்களை இப்ப்போதும் மகிழ்வித்து வருகிறார் மலேசியா வாசுதேவன் அவர்கள்.