தகுதி என்பது எதைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது, ஏன் எல்லோருக்கும் எல்லாமும் சமமாக இல்லை என்பதை கேள்வி எழுப்புகிறது ‘Anjaamai’!
விதார்த், வாணி போஜன் நடிக்க சுப்புராமன் என்பவரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது ‘Anjaamai’. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விதார்த்தின் மகன் கிரித்திக் மோகன். மருத்துவம் படித்து டாக்டர் ஆகவேண்டும் என கனவுகாண்கிறார். மகனின் கனவை நிறைவேற்றத்துடிக்கும் அப்பா நிலபுலன்களை எல்லாம் விற்கிறார். ஆனால், மகனின் டாக்டர் கனவுக்குத் தடையாக வந்து நிற்கிறது நீட் தேர்வு. தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லாமல் இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நுழைவுத்தேர்வுக்கான மையம் ஒதுக்கப்படுகிறது. நுழைவுத்தேர்வுக்காக தந்தையும், மகனும் வட இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணமும், சந்திக்கும் பிரச்சனைகளுமே ‘அஞ்சாமை’ படத்தின் கதை.
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்படும் மாணவர்களின் மரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை இயக்கவேண்டும் என முடிவெடுத்ததற்காக இயக்குநர் சுப்புராமனையும், அதில் நடிக்க ஒப்புக்கொண்ட விதார்த்தையும் பாராட்டலாம். ஆனால், கனமான கதையை கவனமாகக் கைக்கொள்ளாமல் கருத்துப்படமாக்கி, போகிறபோக்கில் ‘’அது ஏன் இப்படி இருக்கு’’, ‘’இதுல என்ன நியாயம் இருக்கு?’’ என எதை எதையோ கேள்வி கேட்டு, ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் படம் அலைபாய்வதே ‘அஞ்சாமை’ படத்தை அயர்ச்சிக்குள்ளாக்குகிறது.
தந்தையாக, மகனின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் பொறுப்பான அப்பாவாக நடிப்பில் அசத்துகிறார் விதார்த். கிராமத்துப் பெண்ணாக, தாயாக பொறுப்பான நடிப்பைத் தந்திருக்கிறார் வாணி போஜன். மாணவனாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன், போலீஸ்காரரான ரகுமான், விஜய் டிவி ராமர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக்கின் கேமரா கண்கள் நல்ல நல்ல காட்சிகளைத் தேடித்தந்திருக்கிறது. ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை.
நல்ல கதையை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு திரைக்கதையை எழுதாமல் ஒரே படத்தில் ஓராயிரம் பிரச்சனைகளையும் பேசிவிடவேண்டும் என்கிற இயக்குநரின் ஆர்வக்கோளாறுதான் படத்தின் பிரச்சனையே. போலீஸ்காரரான ரகுமான் திடீரென வழக்கறிஞராக மாறுவதும், மாணவனே நீதிமன்றத்தில் வாதாடுவதும், அமைச்சர் நீதிமன்றதுக்கு வருவதும் என தொலைக்காட்சி நாடகம்போல காட்சிகளை இஷ்டத்துக்கு எழுதியிருக்கிறார்கள். வாணி போஜன் நடித்திருப்பதால் சீரியல் ரெஃபரன்ஸ் அதிகமா இருக்கோ?!
30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘ஜென்டில்மேன்’ படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டு வலிந்து திணித்து வசனங்களும், காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. அனிதா மரணம் உள்பட பல உண்மைச் சம்பவங்களை படம் பேசுகிறது. அதை மிகைப்படுத்தாமல் உள்ளபடியே காட்சிப்படுத்தியிருந்தாலே படம் அதற்கான தாக்கதை படம் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், எமோஷனைக் கூட்டுகிறேன் என செயற்கையாகப் பல விஷயங்கள் சேர்த்திருப்பதுதான் கதைக்கான அழுத்ததைக் குறைக்கிறது.
கட்டாயம் சொல்லவேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய கதைக்களத்தை மெலோடிராமாக்கி மேலோட்டாமாக்கிவிட்டது அஞ்சாமை!