Home Movie Reviews Garudan Review-குத்துனது நண்பனா இருந்தா கத்தலாமா கூடாதா?!

Garudan Review-குத்துனது நண்பனா இருந்தா கத்தலாமா கூடாதா?!

‘’நட்புனா என்னென்னு தெரியுமா?’’, ‘’நண்பன்னா என்னென்னு தெரியுமா?’’ என்கிற ‘தளபதி' பஞ்ச் டயலாக்தான் ‘கருடன்’ படத்தின் ஒன்லைன்.

by Santhiya Lakshmi

‘’நட்புனா என்னென்னு தெரியுமா?’’, ‘’நண்பன்னா என்னென்னு தெரியுமா?’’ என்கிற ‘தளபதி’ பஞ்ச் டயலாக்தான் ‘Garudan’ படத்தின் ஒன்லைன்.

வெற்றிமாறனின் முன்னாள் உதவி இயக்குநரான துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் படம்தான் ‘கருடன்’. இவர் ஏற்கெனவே ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ என நான்கு படங்களை இயக்கியவர். கருடனைப் பொருத்தவரை வெற்றிமாறன் எழுதிய கதையைவைத்துக்கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறார் துரை செந்தில்குமார். 

நட்புதான் கதைக்களம் என்றால் சசிக்குமார் இல்லாமல் எப்படி? ‘’மதுரைக்காரய்ங்கடா’’ என நட்புக்காக வந்து நிற்கும் சசிக்குமார் ‘கருடன்’ படத்தில் ஆதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் நாயகனான சூரி சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, கர்ணாவாக உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார். இந்த மூன்று பேருக்கும் இடையேயான நட்பும், துரோகமும், நம்பிக்கையுமே கதையின் மையம்.

ஆதியின் நண்பன்தான் கர்ணா. இருவரும் ஊரில் பல்வேறு தொழில்செய்துவரும் தொழிலதிபர்கள். ஊரின் நன்மைக்காக முதல் ஆளாக நிற்பவர்கள். இந்த இரண்டு நண்பர்களில் ஒருவரான கர்ணா அநாதையாக தன்னிடம் வந்து சேரும் சூரி என்கிற சொக்கனை நாய்போல சின்னவயதில் இருந்து சோறுபோட்டு வளர்க்கிறார்.

இந்தச்சூழலில் கோயில் நிலத்தை அபகரிக்க வரும் அமைச்சர், அவருக்கு உதவும் போலீஸ்காரர் சமுத்திரகனியால் நண்பர்களுக்குள் பிரச்சனை வருகிறது. இருவருக்கும் மையமாக இருக்கும் சொக்கன் என்ன செய்தான், யார் பக்கம் நின்றான் என்பதே கருடனின் க்ளைமேக்ஸ்.

மூன்று நாயகர்கள் போலவே மூன்று நாயகிகள். ரேவதி ஷர்மா, ஷிவதா, ரோஷ்ணி(‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் புகழ்பெற்றவர்) என மூன்றுபேருமே தங்களின் பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். 

முதல் பாதியில் அமாவாசை, இரண்டாவது பாதியில் நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ-என்பதுபோல முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் அவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்திருப்பதில் தெரிகிறது சூரியின் கடும் உழைப்பு. காமெடியன் சாயல் கொஞ்சமும் தெரியக்கூடாது என்கிற கவனத்துடன் நடித்திருக்கிறார் சூரி. சசிக்குமார், உன்னி முகுந்தன் இருவருமே படத்தின் ஹீரோ சூரிதான் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, சூரியை பர்ஃபாமென்ஸ் செய்யவிட்டிருக்கிறார்கள். 

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு ‘கருடன்’ காட்சிகளின் மீதான நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறது. ‘’நாயப்போல நன்றியோட இருந்தவனை மனுஷனைப்போல மாத்திட்டீங்களே’’ என்கிற வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.

எல்லோராலும் யூகிக்க முடிந்த, திருப்பங்களோ, ஆச்சர்யங்களோ இல்லாத திரைக்கதைதான் படத்தின் மைனஸ். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ எனப்பெரிதாக எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது கருடன். கதையும் பழைய ‘குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது’ டெம்ப்ளேட்தான் என்பதால் மினிமம் கியாரண்ட்டியாக ஒருமுறை பார்க்கலாம் டைப் படமாக வந்திருக்கிறது ‘கருடன்’.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.