1999-ல் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் காம்போவில் ரிலீஸான படம் ‘படையப்பா’. தலைவர் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்டில் இந்த படத்துக்கென ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. இதில் தலைவருக்கு ஜோடியாக சௌந்தர்யா டூயட் பாடி ஆடியிருந்தார். ரம்யா கிருஷ்ணன் ‘நீலாம்பரி’ எனும் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். ரஜினியின் அப்பா ரோலில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இன்றுடன் (ஏப்ரல் 10-ஆம் தேதி) இப்படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் ஆகி விட்டாலும், இப்போது இதை பார்த்தாலும் பக்கா கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்கிறது. இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ…
1) ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட 3 இயக்குநர்களை அழைத்து ஹீரோயின் ரோலை வில்லியாக காட்டுவது போல் ஒரு கதையை உருவாக்க சொல்லியிருக்கிறார். அப்படி அவர்கள் மூன்று பேரும் ரெடி பண்ணிவிட்டு வந்த கதையில், கே.எஸ்.ரவிக்குமாரின் கதைக்கு தான் ரஜினி டிக் அடித்திருக்கிறார்.
2) முதல் நாள் படப்பிடிப்பின்போது, சூப்பர் ஸ்டாரின் குருநாதரும், இயக்குநருமான கே.பாலச்சந்தர் தான் கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
3) “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல”, “போடா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான்” மற்றும் “என் வழி தனி வழி” போன்ற மாஸ் வசனங்களை ரஜினி தான் எழுதினாராம்.
4) ஷூட்டிங் துவங்கிய முதல் நாளன்று, அப்போது முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, இந்த படம் சூப்பர் ஹிட் படமாக ரஜினிக்கு அமைய வேண்டும் என்று வாழ்த்தி அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தாராம்.
5) கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் ‘நந்தினி’ கதாபாத்திரம் தான் ‘நீலாம்பரி’ கேரக்டர் உருவாகுவதற்கு காரணமாம்.
6) ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்த ‘நீலாம்பரி’ ரோலில் முதலில் நடிக்கவிருந்தது பிரபல நடிகை மீனாவாம்.
7) இந்த படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் புதிய ‘Toyota Sera’ கார் வாங்கியிருந்தாராம். ரஜினி அந்த காரை பார்த்ததும், இதை படத்தில் ‘நீலாம்பரி’ கதாபாத்திரம் பயன்படுத்தும் காராக வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாராம்.
8) ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது பிரபல நடிகை சிம்ரனாம்.
9) இப்படத்தை முடித்து முழுவதுமாக எடிட் செய்து பார்த்தபோது, 2 இடைவேளை விட்டுவிடலாமா? என்று யோசிக்கும் அளவிற்கு படத்தின் நீளம் இருந்திருக்கிறது. இது பற்றி நடிகர் கமல்ஹாசனிடமும் ரஜினி பேசியிருக்கிறார். ஆனால், கமலோ 2 இடைவேளை வேண்டாம் என்றும், கே.எஸ்.ரவிக்குமாரிடம் நீளத்தை குறைக்க சொல்லுங்க என்றும் சொல்லி விட்டாராம்.
10) இந்த படத்தில் வில்லி ரோலில் நடிப்பதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.11 லட்சமாம்.