‘அமரன்’ படத்தை முடித்துவிட்ட நிலையில் A.R. Murugadoss படத்தில் முழுவதுமாக இணைந்துவிட்டார் சிவகார்த்தியன். இவரின் 23-வது படமான இதன் ஷூட்டிங் தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. படத்துக்கு ‘சிங்கநடை’ எனப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்துமுடிந்தது. இந்த இரண்டாவது ஷெட்யூலில்தான் படத்தின் முக்கிய நடிகர்கள் இணைந்தனர். விஜய்யின் அம்மாவான ஷோபாவின் தங்கை ஷீலாவின் மகனான விக்ராந்த் இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விக்ராந்த்தின் லுக் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் என்கவுன்டருக்குத் தயாராகும் காமாண்டோ வீரர் கெட்அப்பில் இருந்தார் விக்ராந்த். விக்ராந்த்தோடு சேர்ந்து ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வாலையும் இதில் நடிக்க வைத்திருக்கிறார் முருகதாஸ்.
கன்னட நடிகையான ருக்மினி வசந்த் இந்தப்படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார். அதேப்போல் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் நடித்த பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு ‘சார்பட்டா’ படத்தில் டான்ஸிங் ரோஸாக கலக்கிய நடிகர் ஷபீரும் இதில் நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கிடையே சிவகார்த்திகேயன் படத்துக்கு இடையே கிடைத்த கேப்பில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.