தமிழ் சினிமாவில் 90-களில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த இவர் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின், திரையுலகில் இருந்து விலகினார். அதன் பின்னர் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.
அவ்வப்போது கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து தனது நண்பர்களை சந்தித்து செல்லும் ரம்பா இந்த முறை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அப்புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்ட நடிகை ரம்பா அதில், ‘’பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது’’ என்றும் ‘’உங்களது தவெக கட்சிக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்றும் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.
விஜய் மற்றும் ரம்பா இணைந்து ‘மின்சார கண்ணா’, ‘சுக்ரன்’, ‘என்றென்றும் காதல்’, ‘நினைத்தேன் வந்தாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.