Home Cinema News பஸ் கண்டக்டர் டூ இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

பஸ் கண்டக்டர் டூ இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் என்ற உடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கும் வருவது ரஜினிகாந்த் என்னும் எளிய மனிதர் தான். தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் இந்திய சினிமாவை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தன் வசம் வைத்துள்ளார்.

by Sudhakaran Eswaran

  ரஜினி காந்த் 1950-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் நாச்சிக்குப்பம் பகுதியில் பிறந்தார். அப்போது அது மைசூர் மாநிலமாக இருந்தது. சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்ப்பெயர் கொண்ட ரஜினிகாந்திற்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி உட்பட நான்கு பேர் உள்ள குடும்பத்தில் பிறந்தார். இவரது அப்பா காவல் துறையில் பணியாற்றி வந்தார். இவரது அம்மா இவர் 9 வயது இருக்கும் போது இறந்து விட்டார். தனது ஆரம்பகால கல்வியை பெங்களூரு மாநிலத்தில் பயின்றார். விளையாட்டில் ஆர்வமாக இருந்த ரஜினி படிப்பதிலும் கெட்டிக்காரராக இருந்தார். தனது சகோதரர் அறிவுரையின் பேரில் ராமகிருஷ்ணா மடாலயம் ஒன்றில் சேர்ந்து கல்வி கற்று வந்தார். அங்கு அவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. 

2 2

ஒருமுறை மகாபாரத கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அற்புதமாக நடித்து அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த ரஜினிகாந்த் நடத்துனராக சில ஆண்டுகாலம் பணியாற்றி வந்தார். கன்னட நாடக கலைஞர் முனியப்பா அவரது நாடகங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார். தனது நண்பர்களின் உதவி மூலம் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவனத்தை ஈர்த்தார். திரைப்பட துறையில் நுழைந்த பிறகு தனது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றுமாறு கே.பாலச்சந்தர் கூறியதை ஏற்றுக்கொண்டு சிவாஜி ராவ் என்ற பெயரை மாற்றிக்கொண்டார்.  

  1975-ஆண்டு ஆபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த் தனது நடிப்பின் மூலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக மாறினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தனது நடிப்பு திறமை மூலம் அனைவரையும் ஈர்த்து வந்தார். இதுவரை 170 படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்தியா சினிமாவில் வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் அவர்களுக்கு  1984-ஆம் ஆண்டு கலைமாமணி விருது, 2000-ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது, 2016-ஆம் ஆண்டு பத்ம விபூசன் விருது, 2011-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி விருது, 2021-ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்க்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. திரைப்பட துறையில் உயரிய விருதான சிவிலியன் விருது 2019-ஆம் ஆண்டு திரைப்பட துறையில் அவரின் அர்பணிப்புக்கு இந்தியா திரைப்பட துறை சார்பாக வழங்கப்பட்டது.  

  ஏறத்தாழ 50- வருடங்களாக இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இதுவரை யாரும் தொட முடியாத உச்சத்தை அடைந்துள்ளார். சிவாஜி , எம் ஜி ஆர் காலத்தில் தொடக்கி சக நடிகர்களான கமல், விஜயகாந்த், பிரபு ஆகியோருடனும் பின்னர் வந்த விஜய், அஜித், சூர்யா என மூன்று கால நடிகர்களுடனும் நடித்து தனது நடிப்பால் இன்னும் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருகிறார். 16 வயதினிலே படத்தில் இவர் பேசும் “இது எப்படி இருக்கு” என்ற வசனம் பட்டிதொட்டி எங்கு பரவிக்கிடந்தது. மூன்று முகம் படத்தில் “தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசினாள் தான் தீ பிடிக்கும் இந்த அலெஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினால் தீ பிடிக்கும்” என்ற வசனம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பாட்ஷா படத்தில் “நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவ சொன்ன மாறி“என்று பேசிய மாஸ் வசனம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

  அண்ணாமலை படத்தின் மூலம் பால்க்காரரின் அருமையையும், பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரரின் வலியையும், மன்னன், உழைப்பாளி படத்தின் மூலம் தொழிலாளியின் கஷ்டத்தையும் தனது நடிப்பால் மக்களுக்கு தெரியப்படுத்தினார். முத்து, அருணாசலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி என 5 பிளாக் பாஸ்டர் திரைப்படங்களை குறுகிய காலகட்டத்தில் கொடுத்துள்ளார். இந்திய திரைப்பட துறையில் கருப்பு வெள்ளை, நிறம், 3D, மோஷன் கேப்சர் என நான்கு வடிவ ஸ்க்ரீன்களில் நடித்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. 

     மூன்று முடிச்சு , 16 வயதினிலே, பில்லா, பொல்லாதவன், முரட்டு காளை, தில்லு முல்லு, மூன்று முகம், போக்கிரி ராஜா, பாயும் புலி, அடுத்த வாரிசு, தங்கமகன், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், விடுதலை, மிஸ்டர் பாரத், மனிதன், குரு சிஷ்யன், வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, தளபதி, அண்ணாமலை, எஜமான், பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், ஜெயிலர் என கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட மாபெரும் வெற்றிப்படங்களை தந்துள்ளார்.ஒவ்வொரு படத்திலும் தனது ஸ்டைல் , பேச்சு , நடிப்பு மூலம் ரசிகர்களை மயங்கினார்.   

  ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை இமயமலை பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆசிய அளவில் ஜாக்கி ஜான்க்கு அடுத்தபடியாக அதிக அளவு ஊதியம் வாங்கிய ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான். ரஜினிகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். 1978-ஆம் ஆண்டு வெளியான பைரவி படத்திலிருந்து சூப்பர் ஸ்டார் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் “பஸ் நடத்துனர் முதல் இந்திய சூப்பர் ஸ்டார்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே திடைப்பட நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. இதன் மூலம் மாணவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற உந்துகோலாக இருந்து வருகிறார். 

தற்போது ரஜினிகாந்த் கைவசம் ‘வேட்டையன்‘ மற்றும் ‘தலைவர் 171‘ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.