தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் தனது 50-வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது மேடையில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் அவர் கட்டிய வீடு குறித்து பேசப்படும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதில் அவர், ‘’நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் 16 வயதில் இருக்கும் போது ஒரு நாள் அவரது வீட்டை பார்க்க போயஸ் கார்டனுக்கு சென்று பார்த்தேன். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் கெஞ்சிவீட்டிற்குள் பார்க்க ஆசைப்பட்டேன், ஆனால் பார்க்க முடியவில்லை. பிறகு அருகில் கூட்டமாக இருந்தது அதனை பார்த்துவிட்டு அது யார் வீடு என்று என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். அது அம்மா ஜெயலலிதா அவர்களுடைய வீடு என்று அவர் சொன்னார். அவர்களது வீட்டை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அப்போது என்னுடைய மனதில் போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என்ற ஆசை உருவானது. அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவின் ஆசைக்கு, தனுஷ் கொடுத்த கிஃப்ட் தான் போயஸ் கார்டனில் நான் கட்டிய அந்த புதிய வீடு” எனக்கூறி தேவையில்லாமல் பரவும் சர்ச்சைகளுக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.