கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்து 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சான்‘. இந்த படத்தை ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார்.
இதில் சூர்யா ‘ராஜுபாய்’ என்ற ரோலில் வலம் வந்து மாஸ் காட்டியிருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி ஷர்மா, ஜோ மல்லூரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து, படத்தின் மீதான ஹைப்பை ஏற்றி விட்டது. ஆனால், படம் ஆடியன்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் வெற்றிபெறவில்லை.
தற்போது, தமிழில் ஏற்கனவே ரிலீஸாகி வெற்றி பெற்ற பல படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகிய வண்ணமிருக்கிறது. நேற்று (மார்ச் 27-ஆம் தேதி) இயக்குநர் லிங்குசாமி – சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘பையா’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸானது.
இந்நிலையில், சென்னையில் உள்ள கமலா சினிமாஸில் ரீ-ரிலீஸான ‘பையா‘வை ஆடியன்ஸுடன் பார்க்கச் சென்றிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அப்போது, ‘பையா’ படத்துக்கு ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பை பார்த்து மகிழ்ந்ததுடன், சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தை ரீ-எடிட் செய்து வருவதாகவும், மிக விரைவில் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.