கோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக மாஸ் காட்டுபவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது நயன்தாரா கைவசம் ‘டெஸ்ட், மண்ணாங்கட்டி Since 1960’ ஆகிய இரண்டு படங்கள் மட்டும் இருக்கிறது. இதில் ‘டெஸ்ட்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘மண்ணாங்கட்டி Since 1960’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘குரங்கு பொம்மை‘ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளாராம்.
‘குரங்கு பொம்மை’ படத்துக்கு பிறகு இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’வை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
நயன்தாராவுடன் கூட்டணி அமைக்கும் படத்திற்காக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மிக விரைவில் இன்னும் பெயரிடப்படாத இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.