சில ஆண்டுகளுக்கு முன்புவரை Tamil cinema உலகில் நடிகர்களின் சம்பளமே உச்சப்பட்சமாக இருந்தது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பட்ஜெட்டில் முதலில் ஹீரோ, அதற்கு அடுத்து ஹீரோயின், வில்லன் என அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில்தான் இயக்குநர்கள் இருப்பார்கள். ஆனால், இப்போது நிலைமையே மாறிவிட்டது. இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களுக்கு இணையாக பல கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக இயக்குநர் சங்கருக்கு ‘இந்தியன் 2’ படத்துக்காக 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதே தமிழ் சினிமாவின் அதிகபட்சமாக இருந்தது. ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்துக்காக அட்லி 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். ‘ஜவான்’ இந்திப்படம் என்பதால் இது தமிழ் சினிமாவின் ரேட் என எடுத்துகொள்ளமுடியாது என அட்லியின் சம்பளத்தை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எப்போதுமே ரஜினி அல்லது விஜய் படத்தை இயக்கும் இயக்குநர்களின் சம்பளம்தான் இயக்குநர்களில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார் என்பதை முடிவு செய்யும். அந்தவகையில் ரஜினியின் படத்தை இயக்கும் இயக்குநர்கள்தான் டாப்பில் இருக்கிறார்கள். ‘காலா’ படத்தை இயக்கிய பா.இரஞ்சித் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். அதன்பிறகு ‘பேட்டை’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் 10 கோடி வாங்கினார். ஜெயிலர் படத்துக்கு நெல்சனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்வகையில் இப்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜுக்கு 25 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுத்தவிர படத்தின் வெற்றியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். இதன்படி அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் லிஸ்ட்டில் முதலிடம் பிடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.