18-வது நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கவுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளனர். தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தேர்தல் என்றாலே மக்கள் ஒரு திருவிழா போல பார்க்க தொடங்கியுள்ளனர். தங்களது ஆதரவு வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரிக்க ஆர்வமாக சென்று வருகின்றனர்.
தேர்தல் போலவே தனக்கு பிடித்த நடிகர்கள் படம் வெளியாகும் போது ரசிகர்கள் திருவிழாவை மிஞ்சும் அளவிற்கு கொண்டாட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா தனுஷ், சிம்பு சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது திரையரங்கில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர். தேர்தல், சினிமா என இரண்டும் தமிழகத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்து வருகிறது. ஆரம்ப காலம் முதல் தமிழகத்தில் சினிமா துறையை சார்ந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா எப்போதும் இந்தியா சினிமாவில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. தமிழ் திரைப்பட கலைஞர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களில் நடித்து வந்துள்ளனர். விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் தமிழகத்தை போலவே மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். நடிகர்கள் மட்டுமல்ல இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடன இயக்குனர்கள் என பலரும் மற்ற மொழி படங்களில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஒரு சில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதனை கருத்தில் கொண்டு பட ரிலீஸ் தேதியை ஏப்ரல், மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தனர். தேர்தல் நடைபெறும் என்பதால் பட ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் பெரும்பாலான படக்குழு யோசித்து வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எந்த படமும் சரியாக ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்க்கு மாறாக பெரிதும் எதிர்பார்க்காமல் சிறிய நடிகர்கள் கொண்டு எடுத்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில மாதங்களில் ஓரு சில பெரிய ஹீரோக்கள் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் கமல், விக்ரம், விஷால், சுந்தர்.சி என முக்கிய பிரபலங்களின் படங்கள் வெளிவர காத்துக்கொண்டுள்ளது.
அந்த வகையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் விக்ரம், மாளவிகா மோகன், மலையாள நடிகை பார்வதி, பசுபதி மற்றும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவர இருக்கும் இந்தியன் 2 படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதில் எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங் , காளிதாஸ் ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இந்தியன் படப்பிடிப்பின் போது தான் அவர் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் நடிப்பில் ரத்னம் திரைப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், கெளதம் வாசு தேவ் மேனன், யோகி பாபு நடித்துள்ளனர். இதை பூஜை, தாமிரபரணி ஆகிய படத்தை இயக்கிய ஹரி இயக்கியுள்ளார். சுந்தர்.சி-யின் அரண்மனை-4 படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என உறுதிசெய்யப்பட்டு இருந்தது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில் திரைப்படம் வெளியாகும் போது மக்கள் ஆர்வமாக சென்று திரைப்படங்களை கண்டு கழித்து வந்தனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அதே போல் 2017-ஆம் ஆண்டு பாகுபலி 2-ஆம் பாகமும் ஏப்ரல் மாதம் வெளியாகி இந்தியா சினிமாவில் வசூல் சாதனையில் உச்சம் தொட்டது. இவ்வாறு கோடை காலத்தில் மக்கள் பொழுபோக்கிற்க்கு திரைப்படங்களை பார்க்க ஆர்வமாக சென்று கொண்டிருந்தனர். தற்போது தேர்தல் தேதி அறிவிப்பால் படங்கள் வெளியியவதில் சற்று சிக்கல் இருப்பதால் இந்தாண்டு எந்த படமும் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.