நடந்து முடிந்திருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் cinema பிரபலங்கள் போட்டியிட்ட நிலையில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை இருவர் மட்டுமே நேரடியாகப் போட்டியிட்டனர்.
ஆந்திராவில் பவன் கல்யாண், இமாச்சலப்பிரதேசத்தில் கங்கனா ரனாவத், உத்திரபிரதேசத்தில் ஹேமா மாலினி ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட இரண்டு சினிமா பிரபலங்களுமே தோல்வியை சந்தித்தனர்.
விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், ராதிகா சரத்குமார் என இருவருமே ஒருவரை ஒருவர் எதிர்த்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டனர். விஜய பிரபாகரன் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில், அதிமுகவுடன் இணைந்து போட்டிபோட, ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சி மூலம் போட்டியிட்டார். ஆனால் இவர்கள் இருவரையுமே தோற்கடித்து காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.
விஜயபிரபாகரன் ஒரு சூழலில் லீடிங்கில் இருந்தபோது அவரது தயார் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நினைவிடத்தில் தியானத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் சரத்குமார், தன்னுடைய மனைவி ராதிகா வெற்றிபெற கோயிலில் அங்கப்பிரதிஷ்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றிபெற, விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று வெறும் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ராதிகா சரத்குமாருக்கோ 1,66,271 வாக்குகளே கிடைத்திருக்கிறது.
திமுக-வுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் தான் பிரசாரம் செய்த கூட்டணி வெற்றிபெற்றிருப்பதால் கொண்டாட்டத்தில் இருக்கிறார். அடுத்த ஆண்டு ராஜ்யசபா எம்பி-யாகவும் பொறுப்பேற்க இருக்கிறார் கமல்ஹாசன்.