மணிரத்னம் இயக்கிய இந்த மூன்று படங்களில், காவியங்களின் கதைகளை, நவீன சினிமா பிரியர்களுக்கு ஏற்றவாறு மாற்றி, அதன் சாராம்சம் மாறாமல் இயக்கியிருப்பார். ராவணன் படம் ரீ ரிலீஸாகி உள்ள நிலையில், ராமாயணம், மகாபாரதம் கதைகளை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் இவை.
தளபதி (1991)
ரஜினிகாந்த், மம்முட்டி, ஸ்ரீ வித்யா, ஷோபனா, பானுப்ரியா, அம்ரிஷ் பூரி, அரவிந்த் ஸ்வாமி நடிப்பில் மகாபாரத கதையை தழுவி பிரம்மாண்ட வெற்றி படம். காவிய கதையில் வரும் முக்கிய பாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை புதிய பரிமாணத்தில் இயக்கியிருப்பார் மணிரத்னம்.
ரஜினிகாந்தின் பாத்திரம் சூர்யா, குழந்தையாக இருந்தபோது அனாதையாக்கப்பட்டு, மும்பையில் ஒரு கூவத்து மக்களால் எடுத்து வளர்க்கப்படுவார். மம்முட்டி துரியோதனனின் பாத்திரத்தில் தேவராஜ் ஆக நடித்தார் மம்முட்டி. இந்த இருவருக்கும் ஏற்படும் இணையில்லா நட்பும், அவர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கையில் எடுக்கும் வன்முறையும் படத்தை நகர்த்தும். மகாபாரதத்தில் வரும் அர்ஜுனன் பாத்திரத்தை கலெக்டர் அர்ஜுன் ஆக எழுதி, திரௌபதி கதாப்பாத்திரத்தில் ஷோபனாவை நடிக்க வைத்திருப்பார். குந்தி தேவியின் ஏக்கத்தையும் குற்ற உணர்வையும் ஸ்ரீ வித்யா தத்ரூபமாக காட்டியிருப்பார்.
அர்ஜுன் பாத்திரம் படத்தில் கொண்டுவரும் மாற்றமும், தேவராஜ்- சூர்யா இடையே உள்ள நட்பும் மகாபாரத கதையின் தழுவல். கர்ணன் மற்றும் துரியோதனனின் கண்ணோட்டத்தில் புகழ்பெற்ற காவியத்தை மக்கள் ஏற்கும் வகையில் காட்டியது படத்தின் பலம்.
‘சின்னத்தாய் அவள்’ பாடலின் வலி கலந்த மெல்லிசை, அம்மா மகனின் உறவில் உள்ள பிழவையும், அறியாமையும் பல ஆண்டுகள் தேக்கி வைத்த பதிலில்லா கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது. தளபதி படம், மகாபாரத கதையை அப்படியே பேசாமல் அதில் கேள்விகளாய் கசிந்த சில உரையாடல்களை சிறந்த திரைக்கதையுடன் பேசிய படம்.
ரோஜா (1992)
மகாபாரதத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் பல கதைகள் வழியாக தெரிவிக்கப்படும். அப்படி ஒரு ரிஷி, யுதிர்ஷ்டரிடம் கூறும் கதை தான் சத்யவான்- சாவித்ரி. தன்னுடைய கணவனை சாவில் இருந்து மீண்டு வரும் சாவித்ரியின் கதையை 1992ல் மக்களுக்கு ஏற்ப மாற்றி எழுதியிருப்பார் மணிரத்னம். ரோஜா ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண். தன் அக்காவிற்கு கல்யாணம் நடப்பதை தவிர்க்க அவள் செய்யும் சின்ன சின்ன விளையாட்டான சேட்டைகள் உடன் படம் தொடங்கும்.
விருப்பமில்லாத திருமண வாழ்வில் கணவனின் சூழலுக்கு மாறி சில நாட்களில் திருமண வாழ்வை விரும்பி ஏற்றுக்கொள்வார். ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பணிக்காக செல்லும்போது அரவிந்த் ஸ்வாமியை கடத்திச் சென்று மிரட்டும் தீவிரவாதிகள். அவர்களிடம் இருந்து தன் கணவனை எப்படியெல்லாம் மீட்க போராடுகிறார் ரோஜா என்பது தான் கதை.
அரவிந்த் ஸ்வாமி, மதுபாலா, ஏ. ஆர். ரஹ்மான் என புதிய குழுவுடன் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார் இயக்குனர் மணிரத்னம். சத்யவான்-சாவித்ரி கதையை பல மாடர்ன் மாற்றங்களுடன் திரைக்கதையில் நிகழ்கால அரசியலையும் தீவிரவாதத்தையும் சேர்த்து கிளாசிக் படமாக அமைந்தது ‘ரோஜா’.
ராவணன் (2010)
இந்தியாவில் அதிகம் பேசப்படும் காப்பியமான ராமாயணத்தை திரைக்கதையாக எழுதி நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், பிரபு நடிப்பில் வெளியான படம் ‘ராவணன்’. சீதையை ராவணன் கடத்தி சென்று எப்படி ராமன் தன் மனைவியை மீட்டுவருகிறார் என்பது ராமாயணத்தின் கதை.
இதையே இயக்குனர் மணிரத்னம், ராவணனின் பாதையில் பயணித்து இன்றைய கதைக்களத்தில் தேவையான மாற்றங்களுடன் தெளிவான திரைக்கதைய்க எழுதியிருப்பார். பழங்குடியின மக்களின் தலைவனான விக்ரம் தன்னாட்சி ஒன்றை நடத்திவருகிறார். அதனால் காவல் துறை அதிகாரியான பிருத்விராஜீக்கு சிக்கல்கள் எழ, விக்ரம் வீட்டு கல்யாணத்தின் போது அறிவிப்பில்லா தாக்குதலை நடத்தி அவரின் தங்கையான பிரியா மணியை கடத்தி செல்கிறார்.
காவல் துறையின் கொடுமைகளில் தற்கொலை செய்வார் பிரியா மணி. இதற்கு பழி தீர்க்க பிருத்விராஜீன் மனைவியான ஐஸ்வர்யா ராயை கடத்தி கொல்ல திட்டம் போடுவார். கடத்தியவர்களின் கதையை கேட்டு அவன் மேல் இரக்கமும் காதலும் துளிர, கடைசியில் சண்டை காட்சிகளில் ஐஸ்வர்யா ராயை மீட்கும் கதை.
வெளியானபோது பெரியளவில் வரவேற்பு இல்லாமல் ஓரளவுக்கு வசூல் செய்தது. தமிழில் நடிப்பிற்காக பாராட்டப்பட்டு, ஹிந்தியில் திரைக்கதைக்காக கடும் விமர்சனத்துக்கு ஆளானது.