தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக அறிமுகமான இரஞ்சித் அரசியல் பேசும்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்தார். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘தங்கலான்’ என அடுத்தடுத்தப்படங்கள் மூலம் தனிக்கென தனியிடம் பிடித்திருக்கும் இரஞ்சித் இப்போது அடுத்த வேட்டைக்குத் தயாராகிவிட்டார்.
#வேட்டுவம் #vettuvam pic.twitter.com/Iqf6Wk8ikb
— pa.ranjith (@beemji) May 19, 2022
விக்ரம் ஹீரோவாக நடிக்க, இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘தங்கலான்’ படம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகளால் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. ஜூலை மாத இறுதியில் ‘தங்கலான்’ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூலை மாதத்தில் தனது புதிய படமான ‘வேட்டுவம்’ படத்தை தொடங்குகிறார் இரஞ்சித்.
‘’ ‘வேட்டையன்’ என்கிற பெயரில் த.செ.ஞானவேல் ரஜினியைவைத்து தற்போது ஒரு படம் இயக்கிவரும் நிலையில் கிட்டத்தட்ட அதேபோன்றதொரு பெயரில் இரஞ்சித் படமெடுப்பது சரியா என்கிற கேள்விகள் எழும். ஆனால், பா.இரஞ்சித் இந்த டைட்டிலை 2020-ம் ஆண்டே பதிந்துவிட்டார்’’ என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
‘வடசென்னை’ படத்தில் பெரும்பான்மையான பகுதி சென்ட்ரல் ஜெயிலுக்குள் படம்பிடிக்கப்பட்டிருக்கும். ‘வேட்டுவம்’ படத்தைப் பொருத்தவரை கிட்டத்தட்ட முழுப் படமே சிறைச்சாலைக்குள்தான் இருக்கும் என்கிறார்கள். இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க, Arya வில்லனாக நடிக்க இருப்பதோடு, இரஞ்சித்தோடு இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கவும் இருக்கிறார். சென்ட்ரல் ஜெயிலுக்குள் அடித்துக்கொல்லப்பட்ட பாக்சர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி இந்தப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங்கை ஒன்றரை மாதத்துக்குள் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘சார்பட்டா-2’ படத்தை இயக்கயிருக்கிறார் இரஞ்சித்.