கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT)-ஐ இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது.
அதிக பொருட்செலவில் ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, அஜ்மல் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு இளைஞர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நேற்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘விசில் போடு’வை வெளியிட்டிருந்தனர். விஜய் பாடியிருந்த இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது, இந்த பாடலை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்றும், நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கொடுத்த புகாரில் “நடிகர் விஜய் அவர்கள் பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ‘லியோ’ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன்.
தற்போது, அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால், நடிகர் விஜய் அதை வைக்கவில்லை! அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது.
மைக்கை கைவில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகரை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான், நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் நடிகர் விஜய்.
குடிமக்கள் தான் தம் கூட்டணி, நடிகர் விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை, குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயை திறக்கும் நடிகராக நடிகர் விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே . ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது.