‘பவர் பாண்டி’க்கு அடுதுது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இரண்டாவது படம் ராயன்.
தனுஷ் நடிப்பில் வெளிவரப்போகும் 50-வது படம் என்பதால் இந்தப்படத்துக்கான பில்ட் அப் அதிகரித்திருக்கும் நிலையில் ஜூன் 13 ரிலீஸ் என இன்று அறிவித்திருக்கிறது சன் டிவி.
காத்தவராயன் என்கிற பெயரின் சுருக்கமே ‘ராயன்’. சென்னை ராயபுரத்தில் ஒரு ஹவுஸிங் போர்ட்டில் வசிக்கும் அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை. தனுஷின் உடன்பிறப்புகளாக படத்தில் சந்தீப் கிஷனும், காளிதாஸ் ஜெயராமும் நடித்திருக்கிறார்கள். படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். ‘சார்பட்டா’ படத்தில் நடித்த துஷாரா, ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்த அபர்ணா, வரலட்சுமி சரத்குமார் என படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சரவணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தொழில் செய்து முன்னேறத்துடிக்கும் வடசென்னை ராயபுரத்தின் மூன்று இளைஞர்கள் எப்படி வன்முறைச் சூழலுக்குள் வந்து சிக்குகிறார்கள், அவர்களுக்குப் பின்னால் அரசியல் எப்படி விளையாடுகிறது, ராயன் எப்படி தன் மக்களை காத்தவராயனாக நின்று காக்கிறார் என்பதே படத்தின் முழுக்கதை.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இன்று முதல் சிங்கிள் ரிலீஸாகி யூ-ட்யூபில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப்பாடலில் பிரபுதேவாவுடன் தனுஷ் இணைந்து ஆடியிருக்கிறார். 500 நடனக் கலைஞர்களுடன் இந்தப்பாடல் சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!