கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும், சோனி இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘அமரன்’. விஜய் டிவியில் ஷோக்களை இயக்கிக்கொண்டிருந்த ராஜ்குமார் பெரியசாமி ‘ரங்கூன்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுடன் இருந்தபோது ஏற்பட்ட நட்பால் ‘அமரன்’ கூட்டணி உருவானது.
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகந்த் வரதராஜனின் பயோபிக் படமான இதில் மேஜர் முகந்தாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகளுடன் நேரடியாகச் சண்டைபோட்டு, தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்று, அந்த சம்பவத்தின்போது உயிரிழந்தவர்தான் முகந்த் வரதராஜன்.
ஷிவ் அரூர், ராகுல் சிங் எழுதிய India’s Most Fearless புத்தக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘அமரன்’ திட்டமிட்டவதைவிட பல கோடிகள் அதிகமாக பட்ஜெட்டைத் தாண்டிப்போவதால் ராஜ்கமல் ஃபிலிம்ஸும், சோனியும் என்ன செய்வது எனத் தீவிர ஆலோசனையில் இருக்கிறது.
சிவகார்த்திகேயனுடன் இந்தப்படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். மேஜர் முகுந்துடன் உயிரிழந்த விக்ரம் சிங் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் புவன் அரோரா நடிக்கிறார். விஸ்வரூபம் படத்தில் நடித்த ராகுல் போஸும் இந்தப்படத்தில் நடிக்கிறார். ‘அமரன்’ படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார்.
100 கோடி ரூபாய் என இந்தப்படத்துக்கு பட்ஜெட் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையிலான செலவுகள் கிட்டத்தட்ட 200 கோடியை நெருங்குவதால் கமல்ஹாசன் இந்தப்படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்கச்சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். இதன்படி நேற்று க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கான ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது.
200 கோடியை பட்ஜெட் தொட்டுவிட்டதால் படம் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றால் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்தில் இருக்கிறது தயாரிப்புக்குழு!