இந்திய சினிமாவை கிட்டத்தட்ட 60 வருடங்களாக தனது இனிமையான குரலால் மயக்கிவைத்திருந்தார். அத்தகைய குரல்வளத்தால் 48000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி, ஒரியா மட்டுமல்லாது ஆங்கிலம், ஜாப்பனீஸ், ஜெர்மன்,சிங்களா என 17 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இத்தகைய சாதனைக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை பின்னணி பாடகி “இசையரசி” என்று கூறப்படும் எஸ்.ஜானகி அம்மா அவர்கள் தான். இவர் ஏப்ரல் 23, 1938-ஆம் ஆண்டு தற்போதைய ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூர் என்ற பகுதியில் பிறந்தார். தந்தை ராமமூர்த்தி ஆயுர்வேத மருத்துவர் மற்றும் ஆசிரியர். தனது 9 வயதில் மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் நாதஸ்வர மேதை பைடிசுவாமி என்பவரிடம் முறையாக இசை பயின்றார்.
பின்னர் சென்னையில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இணைந்து தனது பாடல் திறமையால் தொடர்ந்து கலக்கிவந்தார். தனது முதல் பாடலாக 1957-ஆம் ஆண்டு “விதியின் விளையாட்டு” என்ற படத்தில் பாடியிருந்தார். அதன் பின்னர் தனது காந்த குரலால் மக்கள் மனதை கொள்ளையடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், என கருப்பு வெள்ளை காலகட்டத்தில் இருந்து தற்போது வரை எல்லா காலத்திற்கும் ஏற்ற பாடல்களை பாடியுள்ளார்.
4 முறை தேசிய திரைப்பட விருது, 33 முறை பல்வேறு மாநில அரசின் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, கர்நாடக அரசின் ராஜயுத்சவா விருதுகளை வெற்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 2013-ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை தனது திறமைக்கு தாமதமாக வழங்கப்பட்டது என நிராகரித்து விட்டார். எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா, கே.ஜே ஜேசுதாஸ், பி. ஜெயசந்திரன் ஆகியோருடன் அதிக அளவிலான பாடல்களை இணைந்து பாடியுள்ளார்.
1976-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தில் “செந்தூரப்பூவே செந்தூரப்பூவே” என்ற பாடல் மயில் கதாப்பாத்திரத்தை மிகவும் அழகாக பிரதிபலித்தது. இதற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தில் “மச்சான பார்த்தீ ங்களா” என்ற பாடலில் இளையராஜா அவர்களும் பாடியிருந்தார். இந்த பாடல் இன்று வரை ரசிக்கும் படியாக இருந்து வருகிறது.
1978-ஆம் ஆண்டு சிவப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் “நினைவோ ஒரு பறவை” என்ற பாடலை கமல்ஹாசன் உடன் பாடியிருந்தார்.
1981-ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” என்ற பாடலில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா, வைரமுத்து, ஜானகியம்மா கூட்டணியில் மெகா ஹிட்டானது.
1983-ஆம் ஆண்டு அனந்தகும்மி என்ற படத்தில் “ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது” என்ற பாடலில் எஸ்.பி.சைலஜா, இளையராஜா, கங்கை அமரன், ஜானகி கூட்டணியில் உருவானது.
1983-ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தில் “பொன்மேனி உருகுதே” என்ற பாடலில் இளையராஜா உடன் பாடியிருந்தார்.
1985-ஆம் ஆண்டு ஆண்பாவம் படத்தில் நடிகை ரேவதியின் குறும்பு தனத்தை வெளிக்காட்டும் விதமாக வெளியான “என்னை பாட சொல்லாத நான் கண்டபடி பாடிபுடுவேன்” என்ற பாடல் இளையராஜா, வைரமுத்து உடன் பாடியிருந்தார்.
1989-ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் மற்றும் கௌதமி ரோமேன்ஸ் செய்யும் ” வாழவைக்கும் காதலுக்கு ஜே” என்ற பாடல் இளையராஜா, எஸ்.பி.பி, வாலி, ஜானகி கூட்டணியில் ஹிட் அடித்தது. அதே ஆண்டு ராமராஜன், கனகா கூட்டணியில் கரகாட்டக்காரன் என்ற படத்தில் வெளியான “மாங்குயிலே பூங்குயிலே” என்ற பாடல் எஸ்.பி.பி. இளையராஜா, ஜானகி கூட்டணியில் உருவாக்கி பட்டிதொட்டியெங்கும் ரசிக்க வைத்தது.
1993-ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் படத்தில் “ஒட்டகத்த கட்டிக்கோ” என்ற பாடல் எஸ்.பி.பி, ஏ.ஆர் ரகுமான், ஜானகி கூட்டணியில் பெரும் வெற்றியை தந்தது. அதே ஆண்டு எஜமான் படத்தில் “ஒரு நாளும் உன்னை மறவாத” என்ற பாடலும் ரசிக்கும் படியாக இருந்தது.
1998-ஆம் ஆண்டு ஷாருக்கன், பிரீத்தி ஜிந்தா, மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரே படத்தில் ” நெஞ்சினிலே நெஞ்சினிலே” என்ற பாடல் ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஜானகி இருவரும் பாடியிருப்பார்கள்.
1999-ஆம் ஆண்டு வெளியான முதல்வன் படத்தில் “முதல்வனே முதல்வனே” என்ற பாடலில் சங்கர் மஹாதேவன், வைரமுத்து, ஏ.ஆர். ரகுமான் உடன் பாடியிருப்பார். அதே ஆண்டு சங்கமம் படத்தில் “மார்கழி திங்களல்லவா” என்ற பாடல் பாடி அசத்தியிருப்பார். மேலும் ஜோடி படத்தில் ” காதல் கடிதம் தீட்டவே” என்ற பாடலில் பாடியிருப்பார்.
நீண்ட நாட்கள் ஓய்விற்கு பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் “அம்மா அம்மா” என்ற பாடலின் மூலம் தாயை இழந்த மகனின் வேதனையை கண்முன்னே கொண்டு வந்திருப்பார்.
இசை உலகில் ஜானகி அம்மா படைத்த சாதனைகளை பட்டியலிட்டு காட்ட முடியாத அளவில் உள்ளது. இவரது சாதனைகளுக்கு நிகர் இவரே என்ற அளவில் இதுவரை யாரும் இவரது சாதனையை தொட முடியாது இனிமேலும் தொட முடியாத வண்ணம் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனது வாழ்வை இசைக்கு அர்ப்பணித்துள்ளார்.