இந்த சினிமா பாடல் வரிகள் நாம் படித்த சங்க இலக்கியம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!
தமிழ் திரைப்படங்கள் இன்றும் மக்களிடம் பெரும்பாலும் பாடல்கள் வழியே தான் சென்றடைகிறது. அதில் சமீபத்திய தமிழ் பாடல்கள் இந்தியா அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் ஹிட்டாகி வைரலாகி வருகிறது. இதற்கு புதிய இசையமைப்பாளர்களும் அவர்களின் துள்ளலான இசையும் தான் பெரிய காரணமாக அமைகிறது. அதில் பாடல் வரிகளின் பங்கும் முக்கியத்துவமும் குறைந்து இருப்பது அனைவராலும் காணமுடிகிறது. சில பாடலாசிரியர்கள் இனிமையான நல்லத் கருத்தான பாடல்களை எழுதியுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது சற்று பின்னடைவாக தான் பார்க்கிறோம்.
Tamil Cinemaவின் ஆரம்பக் கட்டத்தில் பாடல் வரிகளுக்கு மெட்டு அமைத்து வெளியிட்டனர். அந்த பாடல்களில் கணிசமான பங்கு தமிழ் சங்க இலக்கியம் பாடல்களுக்கும் உண்டு. ஆண்டாளின் திருப்பாவை, தேவாரம், திருவாசகம் என பல சங்க இலக்கிய பாடல் வரிகளை Tamil Cinema பாடல்களாக கேட்டிருப்போம்.
பொன்னியின் செல்வன்- திருப்பாவை மற்றும் தேவாரம்
போன வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் “ஆழி மழை கண்ணா” என்ற திருப்பாவை வரிகள் ஏ. ஆர். ரஹ்மானின் மெல்லிசையில் கேட்டதும் எங்கோ கேட்ட வரிகள் என்ற எண்ணம் வந்தது. அதே பொன்னியின் செல்வன் படத்தில் “தோடுடைய செவியன்” பாடலாக கேட்டது, திருஞானசம்பந்தர் எழுதிய தேவாரம் புது பொழிவு பெற்றது போன்ற உணர்வு தந்தது.
நறுமுகையே- புறநானூறு
இருவர் படத்தில் ‘நறுமுகையே’ பாடலில் “செம்புலம் கலந்த நீர் துளி போல்” என்ற குறுந்தொகை வரிகள் இடம்பெற்றிருக்கும். இருவர் படத்தில் இந்த பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, சங்க இலக்கிய வரிகளை பயன்படுத்தியிருப்பார். “அற்றைத் திங்கள் அவ் நிலவில்” இருவர் படத்தில் மற்றொரு மறக்கமுடியாத பாடல். இந்த பாடல் உடைய இலக்கிய பாடல், அங்கவை – சங்கவை எழுதிய ஒரு புறநானூறு பாடல்.
காதலன்- குற்றால குறவஞ்சி
குற்றால குறவஞ்சியில் இருந்து “இந்திரையோ இவள் சுந்தரியோ” என்ற வரிகளை காதலன் படத்தில் கேட்டிருப்போம். கேட்கும் காதுகளில் இன்னிசையின் அர்த்தம் அறியும் வண்ணம், இசை, காட்சிகள், எழுத்து, நடிப்பு அமைந்திருக்கும்.
விண்ணைத்தாண்டி வருவாயா- திருக்குறள்
தமிழ் ரசிகர்களால் அதிகம் முனுமுனுக்கப்படும் பாடலில் ஒன்று, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உள்ள ‘மன்னிப்பாயா’. இதில் “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்று திருக்குறள் வரிகள் பாடலின் இசையுடன் ஒன்றி நம்மையும் பாட வைக்கும். உருகவைக்கும் வரிகள், குயிலினும் இனிமையான குரல், காதலுக்கு அன்பு அடிப்படை என்பதையும் இந்த பாடல் குறிக்கிறது.
எந்திரன் 2.0- திருவாய்மொழி
எந்திரன் 2.0 படத்தில் “புல்லினங்காள்” என்று பறவைகளை குறிப்பிட்டு வரும் வரிகள் நம்மாழ்வார் விட்டு சென்ற திருவாய்மொழியில் வரும் வரிகள். பறவைகளுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே இப்படி தான் பலருக்கு தெரியவந்தது. படத்தில் சொல்ல வரும் கருத்தும், அதை இந்த வரிகளை தவிர வேறு வரிகளால் வர்ணிப்பது யோசிக்க முடியாத எண்ணமாக இப்போது தோன்றுகிறது.
தேவர் மகன்- சிலப்பதிகாரம்
தேவர் மகன் படத்தில் வரும் “மாசறு பொன்னே வருக” என்ற வரிகள் மணமகளே மருமகளே பாடலில் வரும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள். கதையின் பாத்திரங்களை தாண்டி அதில் பின் வரும் காட்சியை அந்த வரிகளால் புரியவைக்க முடியும் என்பதற்காக உன்னிப்பாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.