விஜய்யின் பிறந்தநாள் ரிலீஸாக ‘GOAT’ படத்தில் இருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ எனும் பாடல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மறைந்த தன் அக்கா பவதாரிணியின் குரலைப் பயன்படுத்தியிருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.
பவதாரிணியின் குரல் எப்படி?
ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் பவதாரிணியின் குரலுக்கு உயிரூட்டியுள்ளவர் கிருஷ்ண சேத்தன். இவர் ஏ.ஆர் ரஹ்மானுடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளர் மற்றும் இசைக்கோர்வை பொறியாளர். இவரது ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘டைம்லெஸ் வாய்சஸ்’தான் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி ‘திமிரி எழுடா’ என்ற பாடலை கிருஷ்ண சேத்தனுடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, ‘GOAT’ திரைப்படத்தில் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார்.
பவதாரிணியின் வெவ்வேறு குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து எடுத்து, மூன்று நாட்களாக அதை தொழில்நுட்பத்துடன் இணைத்து பாடலை சாத்தியப்படுத்தியிருக்கிறது கிருஷ்ணன் சேத்தன் மற்றும் அவரது டீம்.