மனதை பாதிக்கும் அளவிற்கு உணர்ச்சி மிகுந்த, எளிய மக்களின் வலிகளை தெரிவிக்கும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் இயக்குனர் மாரி செல்வராஜ். ஆகஸ்ட் மாதம் வெளியாகி தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் பாராட்டிய “வாழை” திரைப்படத்தின் 25 வது நாளான நேற்று தேனாம்பேட்டையில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த பொன்வேல், ராகுல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என படத்தில் பணிபுரிந்த எல்லா கலைஞர்களும் பங்கேற்றனர்.
‘வாழை படத்திற்கு இவ்வளவு வரவேற்பும் பாராட்டுகளும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறினார். சொல்லவந்த கதைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு தான் இந்த திரைப்பயத்தில் இருந்து விலகுவேன் என்றும் தனக்கு பிறகு தன்னால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் அந்த கதைகளை இந்த சமூகத்திற்கு கூறுவார்கள் என்று கூறினார் மாரி செல்வராஜ்.
சில விமர்சனங்கள் படத்திற்கு எதிராக எழுந்த நிலையில் அந்த விமர்சகர்களும் கவரும் விதமாக தனது அடுத்தடுத்த படங்கள் அமையும், அதோடு வாழை படத்தில் காண்பிக்கப்படாத பல விஷயங்கள் “வாழை – 2” படத்தில் நிச்சயம் தெரிவிக்கப்படும் என்று அப்டேட் கொடுத்தார். எல்லாவிதமான மக்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களை தனது வலுவான கதைகள் மூலம் கவர்வதே தனது படைப்பின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.