ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியாகும் படம் ‘வாழை‘. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், நிகிலா விமல் நடிக்கும் இந்த படத்தின் கதை தான் மாரி செல்வராஜ் இயக்குனராக எழுதிய முதல் கதை. தன்னுடைய மனதுக்கு மிக நெருக்கமான, உண்மை சம்பவங்களின் சாயல் தான் ‘வாழை‘ என சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தின் முதல் பாடல், ‘தென்கிழக்கு’ வெளியாகியது. ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்ட இந்த பாடலை தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ என்ற பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் குரலில், மாரி செல்வராஜின் வரிகளில் இந்த பாடல் ஒரு வெஸ்டர்ன் பாப் பாடலாக அமைந்துள்ளது. பாடலின் வீடியோ பதிவை யூடியூபில் பதிவிட்ட படக்குழு, அதில் படத்தின் சில காட்சிகளையும் சேர்த்துள்ளனர்.
இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளதாகவும், படத்தில் நடித்த நடிகர்களும் நிஜமாகவே வாழை தார்களை சுமந்து பல மணிநேரம் நடித்ததாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்தார். நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் கடந்து செல்லும் பலரின் கதைகளையும், இன்றும் இப்படியெல்லாம் நடக்கிறதா என வியக்கும் பல கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சில இயக்குனர்களில் மாரி செல்வராஜூம் ஒருவர். அவரின் படைப்பான ‘Vaazhai’ படமும் கண்டிப்பாக ரசிகர்களை சிந்திக்க வைக்கும்.