நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. அவுட்டேட்டட் திரைக்கதையால் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்த இந்தப்படத்தை அடுத்து சத்தம் இல்லாமல் அடுத்தப்படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
‘Aruvi’, ‘வாழ்‘ படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன்தான் இப்படத்தின் இயக்குநர். ‘அருவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநராக எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்த அருண் பிரபு, ‘வாழ்’ படத்தில் சறுக்கினார்.
சிவகார்த்திகேயனின் உறவினரான அருண் பிரபுவின் இந்த ‘வாழ்’ படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க, படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் தனது மூன்றாவது படத்தை ‘அருவி’ போல உருவாக்கவேண்டும் என கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் அருண்.
விஜய் ஆண்டனி நடிக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்துவருகிறது. ‘அருவி’ படம் ஒரு பெண்ணை மையப்படுத்திய கதையாக இருந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் இந்தப்படத்தின் கதையும் தனிமையில் உழலும் ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதைதான் என்று சொல்லப்படுகிறது. விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக இருக்குமாம். விரைவில் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.