கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ‘புரட்சி தளபதி’ விஷால் நடிப்பில் ரெடியாகி, வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படம் ‘ரத்னம்’. இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கியிருக்கிறார்.
இதில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் டூயட் பாடி ஆடியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து, இயக்கி, நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் ஆரம்பமாகவிருக்கிறது.
சமீபத்தில், நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் “நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை.”நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.
வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். தற்போது, விஷால் மீடியாவுக்கு கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் “2026-ஆம் ஆண்டு நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.