தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பான ‘Anandha Ragam‘ தொடரை மதியம் 3 மணிக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தில் ‘இராமாயணம்’ தொடரை ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சன் டிவியில் ‘இராமாயணம்’ தொடர் ஒளிபரப்பப்போவதாக ப்ரோமோ வெளியானது. இந்த ப்ரோமோ வெளியானதில் இருந்தே சன் டிவியா சங்கி டிவியா என சோஷியல் மீடியாக்களில் விமர்சனங்கள் எழுந்தன. பாஜகவுக்கு எதிராக திமுக அரசு போராடிவரும் நிலையில் சன் டிவி ‘இராமாயணம்’ தொடரை ஒளிபரப்பக்கூடாது என சில அரசியல் தலைவர்களே கண்டன அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால், அது அதற்கும் சன் டிவி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
பிசினஸ் வேறு, அரசியல் வேறு என்பதுதான் சன் டிவி கலாநிதி மாறனின் கொள்கை என்பார்கள். அதன்படி சன் டிவி ‘இராமாயணம்’ தொடரை ஒளிபரப்புவதில் முழுமூச்சாக இறங்கிவிட்டது. வரும் மே 13-ம் தேதி முதல் ப்ரைம் டைமில் அதாவது, தினமும் மாலை 6.30 மணிக்கு ‘இராமாயணம்’ தொடரை ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி.
தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் சன் செய்திகள், அதனைத்தொடர்ந்து ‘ஆனந்த ராகம்’ தொடர் ஒளிபரப்பாகும் என்பதுதான் வழக்கமாக இருந்தது. ‘ஆனந்த ராகம்’ டிஆர்பியில் தொடர்ந்து 6 டிஆர்பி-க்கு மேல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இதன் டிஆர்பி சரிந்து வந்தது. கடந்த வாரம் 4.38 என்கிற டிஆர்பிக்கு ‘ஆனந்த ராகம்’ சரிந்த நிலையில் இப்போது இந்ததொடரை மதியம் 3 மணிக்கு மாற்றி, இந்த இடத்தில் இராமாயணத்தைக் கொண்டுவந்திருக்கிறது சன் டிவி.
இதனால் சன் டிவியின் மதிய நேர தொடர்களின் லைன் அப் மீண்டும் மாறியிருக்கிறது. இந்த வாரம் முதல் மதியம் 1 மணிக்கு ‘புன்னகைப்பூவே’, 1.30 மணிக்கு ‘புது வசந்தம்’, 2 மணிக்கு ‘இலக்கியா’, 2.30 மணிக்கு ‘லட்சுமி’, 3 மணிக்கு ‘மலர்’ ஒளிபரப்பான நிலையில் மலரைத் தூக்கிவிட்டு அங்கே ‘ஆனந்த ராகம்’ சீரியலைக் கொண்டுவந்திருக்கிறது சன் டிவி.
‘இராமாயணம்’ தொடர் 6-க்கும் மேலான டிஆர்பியை தரும் என நம்புகிறதாம் சன் டிவி.