விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிட்சயமானவர் அறந்தாங்கி நிஷா. தற்போது திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியூர் ஷூட்டிங் செல்வதற்காக விமானநிலையம் சென்றுள்ளார்.
அப்போது விமானநிலையத்தில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதைப் பற்றி வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் அவர், ‘’ஏர்போர்ட்டில் ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் நிஷா தானா என்று பலமுறை கேட்டுக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் ஏன் அப்படி கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இவ்வளவு நாளா எப்படி ஏமாந்து போயிருக்கோம். டிவியில உங்கள கலரா காட்டுறாங்க. ஆனா, நீங்க நேர்ல இவ்வளவு கருப்பா இருக்கீங்க’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அந்த சமயத்தில் கருப்பா இருக்கிறது ஒன்னும் அசிங்கம் இல்லை என சொல்லிவிட்டு வந்துட்டேன்’
![‘’என்ன இவ்ளோ கறுப்பா இருக்கீங்கன்னு மூஞ்சிக்கு நேரா சொன்னாங்க!’’ - அறந்தாங்கி நிஷா 2 அறந்தாங்கி நிஷா/Aranthangi Nisha](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/07/aranthangi-nisha-.png)
அந்த நபர்மீது எனக்கு உள்ளுக்குள் அதிக கோபம் வந்தாலும் உணர்வு ரீதியாக யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக அதை நான் வெளிக்காட்டவில்லை. இன்னும் எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மனிதர்களோடு தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். நிறத்தையும் அழகையும் வெச்சு மனுஷங்க யாரையும் எடை போடாதீங்க’’ என்றும் ‘’வண்ணத்தை விட அவர்களது எண்ணத்திற்கு மதிப்பு கொடுங்க’’ என்றும் வீடியோவில் பேசியிருக்கிறார் நிஷா.